19 ஆண்டு கால சினிமா வாழ்க்கையில் சக்தியை போல் இயக்குனரை நான் பார்த்ததில்லை – பரத்

ஆக்சிஸ் பிலிம் பேக்டரி தயாரிப்பில் பரத் மற்றும் வாணி போஜன் நடிப்பில் உருவாகியுள்ள படம் “மிரள்”. அப்படத்தின் முன்னோட்டம் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. அதில்,

இயக்குனர் M சக்திவேல் பேசியபோது,
முதல் படம் எனக்கு முக்கியமான படம். காரணம், இன்று ஒரு இயக்குனருக்கு ஒரு நாயகனும் தயாரிப்பாளரும் கிடைப்பது கடினம். அப்படி கிடைத்துவிட்டால் அதை சரியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற பொறுப்பும் பயமும் தான்.

சினிமாவில் பிற தயாரிப்பு நிறுவனங்கள் பொறியியல் கல்லூரி என்றால், எங்கள் தயாரிப்பாளரின் நிறுவனம் ஆக்சிஸ் பிலிம் பேக்டரி IIT போன்றது தான். அவ்வளவு தரமான படைப்புகள் மட்டுமே இருக்கும்.

நான் 20 நாட்களில் படப்பிடிப்பை முடித்திருந்தாலும், படத்தின் இறுதிக்கட்ட பணிகளுக்காக நான் நிறைய நாட்கள் வேண்டுமென்று கேட்டுக் கொண்டேன்.

எனக்கு கிடைத்த அடுத்த வரம் என்று பார்த்தல் கே.எஸ்.ரவிகுமார் சார் தான். அவரிடம் நான் நிறைய கற்றுக்கொண்டேன்.

பரத் சாரிடம் கதை சொன்ன மறுநாளே ஆக்சிஸ் பிலிம் பேக்டரி டில்லிபாபு என்னை அழைத்திருந்தார். தீப்பெட்டியிலுள்ள கடைசி குச்சை பற்ற வைப்பது போல், இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொண்டேன்.

நாயகன் பரத் பேசியபோது,
ஒவ்வொரு படத்தின் விழாவிலும், அப்படத்தின் பயணம் இருக்கும். ஆனால், ஆரம்பித்த உடனே ஒரு படம் முடிந்ததாக இது வரை எந்த படமும் இல்லை. ஆனால் இந்த படம் எனக்கு அமைந்த ஆச்சர்யம் தான்.

நான் இக்கதை கேட்டதும் ஆக்சிஸ் பிலிம் பேக்டரி டில்லிபாபு சாரிடம் படத்தின் கதையை பற்றி பேசினேன். அவர் மீண்டும் 5 நிமிடத்தில் என்னை அழைத்து அன்று மாலையே இயக்குனரை வரவைத்து கதை கேட்டு ஆரம்பித்த படம் தான் “மிரள்”.

சக்தி ஒரு சினிமா பைத்தியம், அவர் தயாரிப்பாளர் மற்றும் நடிகர்களுக்கு தோதானவர். அவருக்கு தேவையான அனைத்தையும் சரியாக பெற்றுக்கொள்வார். அதே போல், நுட்ப ரீதியாக அவர் வலுவான நபர். என்னுடைய 19 ஆண்டு கால சினிமா வாழ்க்கையில் சக்தியை போல் ஒருவரை நான் பார்த்ததில்லை.

20 நாட்கள் படப்பிடிப்பு என்று சொன்னாலும் 40 நாள் உழைப்பு அதில் உள்ளது. இப்படத்தின் நிறைய விஷயங்கள் உள்ளது. இது குடும்பத்திற்கான ஒரு படம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *