Think Studios நிறுவனம் The Show People நிறுவனத்துடன் இணைந்து வழங்கும் இயக்குநர் சக்தி சௌந்தர்ராஜன் இயக்கத்தில் நடிகர் ஆர்யா நடித்திருக்கும் சயின்ஸ் பிக்சன் திரில்லர் திரைப்படம் ‘கேப்டன்’.
இப்படத்தில் ஆர்யாவுடன் சிம்ரன், ஐஸ்வர்யா லக்ஷ்மி, ஹரிஷ் உத்தமன், காவ்யா ஷெட்டி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். மேலும் கோகுல் ஆனந்த், சுரேஷ் மேனன், பரத் ராஜ், அம்புலி கோகுல் மற்றும் பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர்.
D.இமான் (இசை), S.யுவா (ஒளிப்பதிவு), கார்க்கி (பாடல் வரிகள்), பிரதீப் E ராகவ் (எடிட்டிங்), R.சக்தி சரவணன் (ஸ்டண்ட்ஸ்), S.S. மூர்த்தி (கலை இயக்குநர்), மற்றும் V.அருண் ராஜ் ( CG) ஆகியோர் பணியாற்றியுள்ளனர்.
‘டெடி’ படத்தின் பிரமாண்ட வெற்றிக்கு பிறகு ஆர்யா, சக்தி சௌந்தர் ராஜன் கூட்டணியில் இப்படம் ரசிகர்களிடையே மிகப் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
வரும் செப்டம்பர் 8 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் இப்படம் வெளியாகவுள்ள நிலையில், இப்படதின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நேற்று மாலை சத்யம் திரையரங்கில் கோலகலமாக அரங்கேறியது.
இவ்விழாவினில் திரையுலக பிரபலங்கள் பலருடன் படக் குழுவினர் கலந்து கொண்டனர்.
இவ்விழாவினில் ஒளிப்பதிவாளர் யுவா பேசும்போது, “இயக்குநர் சக்தி எப்பொழுதும் ஒரு புதுவித ஐடியாவுடன்தான் வருவார். அவரின் கற்பனை பிரமிப்பாக இருக்கும். ரசிகர்களுக்கு பிரமிப்பை தரும் வண்ணம், சரியான திட்டமிடலுடன் இந்தப்படத்தை எடுத்துள்ளோம். படத்திற்கு ஆதரவு தாருங்கள் நன்றி.” என்றார்.
படத் தொகுப்பாளர் பிரதீப் பேசும்போது, “தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைக் களங்களை கொடுக்கும் ஒரு இயக்குநரிடம் பணிபுரிவது, ஒரு அரிய வாய்ப்பு, அத்தகைய வாய்ப்பு எனக்கு கிடைத்ததில் மகிழ்ச்சி. இயக்குநருக்கு நான் இந்நேரத்தில் நன்றி கூறிக் கொள்கிறேன்.” என்றார்.
![](https://sp-ao.shortpixel.ai/client/to_auto,q_glossy,ret_img/https://touringtalkies.co/wp-content/uploads/2022/08/20220825203040__P3A9783-01.jpg)
இசையமைப்பாளர் டி.இமான் பேசும்போது, “இந்தப் படத்தில் ஆர்யா கடின உழைப்பை கொடுத்துள்ளார். அது திரையில் தெரிகிறது. அதிகமாக கிராபிக்ஸ் இருக்க கூடிய கதைக் களத்தைதான் இயக்குநர் சக்தி கொண்டு வருவார். அது மிகவும் கடினமான ஒரு காரியம். ஏனென்றால் கற்பனையான உருவத்தை இல்லாமலே இயக்க வேண்டும். அதற்கு இசையமைக்க வேண்டும். அது மிகவும் சவாலான காரியம். இயக்குநரின் தெளிவான சிந்தனைதான் திரைப்படத்தை நேர்த்தியாக்கி இருக்கிறது. இந்த படத்தில் யுவன் ஒரு பாடல் பாடியுள்ளார். அவருக்கு நன்றி..” என்றார்.
நடிகை ஐஸ்வர்யா லஷ்மி பேசும்போது, “இந்தப் படம் ஒரு சிறந்த அனுபவமாக இருந்தது. நிறைய இடங்களில் படப்பிடிப்பை நடத்தியுள்ளோம். இந்தப் படத்தில் ஒரு ஆழமான காதல் கதை இருக்கிறது. இயக்குநர் சக்தியின் கடின உழைப்பு, படத்தை சிறப்பாக மாற்றி இருக்கிறது. நடிகர் ஆர்யா படத்திற்கு மிகுந்த உறுதுணையாக இருந்தார். படம் மிகச் சிறப்பாக வந்துள்ளது.” என்றார்.
நடிகர் ஆர்யா பேசும்போது, “நாங்கள் இந்த கதையை தயாரிப்பாளர் ஸ்வரூப்பிடம் கூறும்போது, அவர் எங்களை முழுதாய் நம்பினார். படத்திற்கு தேவையான அனைத்தையும் செய்து கொடுத்தார்.
இயக்குநர் சக்தியின் சிறப்பு என்னவென்றால் அவர் ஒவ்வொரு படத்திலும் ஒரு புது ஜானரை முயற்சிக்கிறார். கிராபிக்ஸ் காட்சிகளை எல்லாம் அவர் சிறப்பாக திரையில் கொண்டு வருவார். இந்தப் படத்தின் சண்டை காட்சிகளை சிரத்தை எடுத்து செய்துள்ளோம். ஒரு பிரம்மாண்டமான மிருகத்துடன் சண்டை போடும் வகையில் இருக்க வேண்டுமென நினைத்து அதற்கு ஏற்றார் போல் சண்டைக் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது.
இமான் சாரை இந்த படத்தின் முதுகெலும்பு என்றுதான் சொல்ல வேண்டும். இது ஒரு ஆக்சன் படம் என்றாலும், அதில் ஒரு அழகான காதல் கதை இருக்கிறது. இந்தப் படத்திற்கு உங்கள் ஆதரவு தேவை..” என்றார்.
![](https://sp-ao.shortpixel.ai/client/to_auto,q_glossy,ret_img/https://touringtalkies.co/wp-content/uploads/2022/08/20220825205145__P3A9828-01.jpg)
இயக்குநர் சக்தி சௌந்தர்ராஜன் பேசும்போது, “இந்தக் கேப்டன் படம், நான் செய்த படங்களிலேயே மிகவும் வித்தியாசமான படம். படம் உருவாக ஆர்யாவும், தயாரிப்பாளர் ஸ்வரூப்பும்தான் காரணம். இது போன்ற படங்களை நம் ஊரில் செய்ய முடியுமா என்று தெரியவில்லை. இந்தப் படம் உருவாவதற்கு காரணமாக இருந்த தொழில் நுட்பக் கலைஞர்களுக்கு நன்றி. இந்தப் படம் என் மனதிற்கு நெருக்கமான படம். உங்கள் அனைவருக்கும் கண்டிப்பாக பிடிக்கும்…” என்றார்.
தயாரிப்பாளர் கலைப்புலி தாணு பேசும்போது, “Think Studios நிறுவனத்தின் முதல் படைப்பே ‘கேப்டன்’ என்ற பெயரில் வந்திருப்பது மகிழ்ச்சி. படத்தை நேர்த்தியாக உருவாக்குவதில் சிறந்த இயக்குநர் சக்தி சௌந்தர்ராஜன். அவருடைய எண்ணத்தை இமான் இசையாக்கி இருக்கிறார். நடிகர் ஆர்யா சிறப்பான நடிகர். அவர் திரைப்படத்தை வெளியிடுவதிலும் ஒரு பகுதியாக இருக்கிறார். அனைவருக்கும் வாழ்த்துக்கள்.” என்றார்.
நடிகர் சந்தானம் பேசும்போது, “ஆர்யாவுடனான என்னுடைய நட்பு மிகவும் நெருக்கமான ஒன்று. ஆர்யாவின் எந்தப் படமாக இருந்தாலும், அதற்கு என் அன்பு இருக்கும். இது ஒரு ஏலியன் படம். இந்த புதுவிதமான கற்பனைக்கே எனது வாழ்த்துகள். இந்த படம் கண்டிப்பாக வெற்றியடையும்..” என்றார்.
மேலும் பல திரைப்பட பிரபலங்களும் படக்குழுவினரை வாழ்த்தினர்.
வரும் செப்டம்பர் 8-ம் தேதியன்று உலகம் முழுவதும் இந்தக் ‘கேப்டன்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.