பேச்சிலர் திரைவிமர்சனம் – (3.75/5)

G டில்லிபாபு தயாரிப்பில், சக்தி பிலிம் பேக்டரி வழங்கும், ஜி வி பிரகாஷ், திவ்யபாரதி, முனிஷ்காந்த், பகவதி பெருமாள்(பக்ஸ்), மிஷ்கின், டீம் (நக்கலைட்ஸ்), முத்து நடிப்பில், சதீஷ் செல்வகுமார் இயக்கத்தில் உருவான படம் ‘பேச்சிலர்’.

கோயம்பத்தூரில் இருந்து பெங்களூர் வரும் டார்லிங்(ஜி வி பிரகாஷ்) அங்கு ஏற்கனவே உள்ள அவரின் நண்பர்களின் வீட்டில் தங்கி ஒரு ஐ.டி கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார், அதே வீட்டில் தங்கி அங்கேயே வேலை பார்க்கும் சுப்பு(திவ்யபாரதி) உடன் ‘லிவிங் டு கெதர்’ல் இருக்கிறார். பின்பு எதிர் பாரா விதமாக கர்பம் அடைகிறாள், வீட்டிற்கும் சமுதாயத்திற்கும் பயப்படும் டார்லிங் கருவை கலைக்கும்படி சுப்புவை வலியுறுத்துகிறான், தனது இரட்டை குழந்தையின் இருதய துடிப்பை கேட்ட சுப்பு அந்த உயிர்களை கொள்ள மனசில்லாமல் மறுப்பு தெரிவித்து, சென்னையிலுள்ள தனது அக்கா வீட்டிற்கு வருகிறாள்.

சுப்புவின் நிலைமை என்ன? அந்த கரு கலைந்ததா? டார்லிங் எப்படி சமாளித்தார்? இருவரும் ஒன்று சேர்ந்தார்களா? என்பது மீதி கதை…

படத்தை அழகான பேச்சிலர் லைப்வுடன் ஆரம்பித்த வண்ணம் அற்புதம், அந்த காட்சிகள் நம் வாழ்க்கையுடன் ஒன்றிப்போகும் வகையில் இருக்கும். ரசிக்கும் வகையில் பாடல்கள், காதல் காட்சிகள், பசங்களின் சேட்டைகள் என முதல் பாதி சூப்பராக இளைஞர்களை கவரும் வகையில் இருந்தது.

இரண்டாம் பாதி கோர்ட் காட்சிகள், சென்டிமெண்ட், அழுகை, வஞ்சம், சண்டை என சிறிது மெதுவான பாதையில் நகர்கிறது . ஆனால் அதை தனது காமெடி மூலம் மறைத்துவிடுகிறார் முனிஷ்காந்த், அவரின் நடிப்பு, டைலாக் டைமிங் பக்கா, அவருக்கு நிகர் மிஷ்கின் ஒரு சில காட்சிகள் வந்தாலும் சிரிக்க வைத்து தான் சென்றார்.

டீம் நக்கலைட்ஸ், பக்ஸ், முத்து, பிராங்க் ஸ்டார் ராகுல், என அனைவரும் மனதில் நிற்க கூடிய கதாபாத்திரங்கள்.

கொங்கு தமிழில் மட்டுமே படம் முழுவதும் பேசப்பட்டிருக்கும்.

ஜி வி பிரகாஷ் நடிப்பு மாற்றப்படங்களை விட வேறுபட்டு தனது நடிப்பில் அடுத்த கட்டத்திற்கு செல்லும் அளவு இருக்கிறது.

திவ்யபாரதியின் நடிப்பு முதல் படம் போல் இல்லை, முதல் படத்தில் வலுவான கதாபாத்திரத்தையும், வலுவையும் உணர்ந்து கொடுக்க பட்ட கதை சுமையை அழகாக தாங்கி பிடித்திருக்கிறார்.

சதீஷ் செல்வகுமாரின் இயக்கம் வாயை பிளக்கும் அளவு பிரமாதம். இது முதல் படம் தானா? சினிமாவை நேசிப்பவர்களால் மட்டும் தான் இப்படி ஒரு தரத்தில் படம் எடுக்க முடியும் என மணிரத்னம், வெற்றிமாறன், தியாகராஜா குமாரராஜா, கெளதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின் போன்ற இயக்குனர்களின் வரிசையில் தனக்கான ஸ்டைல் மற்றும் அடையாளத்தை பதித்திருக்கிறார்.

இயக்குநரின் சிந்தனையை முழுமையாக பூர்த்தி செய்திருக்கிறார் பின்னணி இசையில் பின்னிய சித்து குமார்.

சான் லோகேஷ் படத்தொகுப்பை சரியான அளவில் தொகுத்துள்ளார். இருந்தாலும் சில காட்சிகளை தவிர்த்திருக்கலாம்.

படத்தின் அடுத்த பக்கபலம் கலை இயக்குனர் லக்ஷ்மி தேவா. ரியாலிட்டியை திரையில் காட்டியுள்ளார்.

தேனீ ஈஸ்வர் ஒளிபதிவு கச்சிதம், அனைவரின் வலியையும் கோபத்தையும் காட்சிப்படுத்திய விதத்திற்கு பாராட்டுக்கள்.

கோழி கூவும் சத்தம், புறாவின் சத்தம் படத்தில் ரசிக்கும் இடத்திலும் அர்த்தமானதாகவும் இருந்தது.

படம் ஒரு மலையாள படத்தின் சாயலில் அற்புதமாக இருக்கும்.

எதிர் பார்க்காத கிளைமாக்ஸ் படத்தின் அழகை மேன்படுத்தியது, அனைவரும் ஏற்றுக்கொள்ள கூடிய வகையறா.

படத்தில் ஒரு சின்ன மைனஸ் என்றால் இரண்டாம் பாதியில் சுப்புவிற்கு பெரிதும் முக்கியத்துவம் கொடுக்க படாததும் டார்லிங் மற்றும் சுப்புவின் சண்டையை விட சுற்றி இருப்பவர்களின் வலியை, கோவத்தை உணர்த்தியது தான்.

பேச்சிலர் – காமத்தால் கொலை செய்யப்பட்ட காதல்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *