வாய்தா திரை விமர்சனம் – (3.5/5)

மு.ராமசாமி, புகழ் மஹேந்திரன், பௌலின் ஜெசிகா, நக்கலைட்ஸ் புகழ் பிரசன்னா மற்றும் நாஸர் நடிப்பில் லோகேஷ்வரன் இசையில் மஹிவர்மன் இயக்கத்தில் உருவான படம் “வாய்தா”.

பல சிக்கல்களுக்கு மத்தியில் வாய்தா மேல் வாய்தா வாங்கி தற்போது வெளியாகியிருக்கும் இப்படத்தின் கதைப்படி,

சலவைத் தொழிலாளியாக வேலை செய்துக் கொண்டிருக்கும் மு.ராமசாமி அவர்களுக்கு ஒரு நாள் எதிர்பாராத விதமாக சமுதாயத்தால் சித்தரிக்கப்பட்டுள்ள உயர் சாதி இளைஞனின் பைக் மோதி விபத்துக்குலாகிறார். அதன் பின் அவருக்கு கையில் எலும்பு முறிவு ஏற்பட்டுகிறது. அதன் பின் இரு ஊரில் இருக்கும் உயர் சாதி ஆட்களிடம் இந்த விபத்து பஞ்சாயத்தாக மாற, இறுதியில் நீதி மன்றத்தை நாடும் சூழலுக்கு தள்ளப்படுகிறது மு.ராமசாமியின் குடும்பம்.

அதன் பின் அவர்களுக்கான சரியான நீதி, சரியான நேரத்திற்கு கிடைத்ததா? இல்லையா? என்பது மீதிக்கதை.

சலவைத் தொழிலாளியாக நடித்திருக்கும் மு.இராமசாமி, அந்தப் பாத்திரமாகவே மாறியிருக்கிறார். அதனால் பார்ப்போர் மனதைக் கலங்க வைக்கிறார். அவருடைய பரிதாபமான பார்வை ஒன்றே போதும் அவருடைய நடிப்பின் சிறப்பைச் சொல்ல.

அவருடைய மகனாக படத்தின் நாயகனாக அறிமுகமாகியிருக்கும் புகழ் விசைத்தறித் தொழிலாளியாக அவர் வரும்போதே இரசிகர்களுக்கு நெருக்கமாகிவிடுகிறார். ஆதிக்கசாதி இளைஞர்களுக்கு எதிராக ஆவேசம் கொள்ளுமிடத்தில் அவரின் சிறப்பான நடிப்பை வெளிக்காட்டியுள்ளார்.

நாயகியாக நடித்திருக்கும் பௌலின் ஜெசிகா இந்தப்படத்துக்கேற்ற அழகி என்றே சொல்லலாம். அவர் வந்து சென்ற காட்சிகளில் எதார்த்தமாக இருப்பது அவருடைய பலம். அவரின் நடிப்பு இது அவரின் முதல் படம் என்று வெளிக்காட்டதா வண்ணம் அனுபவம் வாய்ந்த வகையில் இருந்தது.

சிறப்புத் தோற்றத்தில் நடித்திருக்கும் நாசர் வழக்கம் போல் அவரின் அனுபவத்தை காண்பித்து சென்றார். உயர் சாதி மனோபாவத்தை அப்பட்டமாக வெளிப்படுத்தியிருக்கும் நக்கலைட்ஸ் புகழ் பிரசன்னா உட்பட எல்லா நடிகர்களும் நன்றாகச் செய்திருக்கிறார்கள்.

சேதுமுருகவேல் அங்காகரகன் ஒளிப்பதிவில் சிறப்பாக செயல்பட்டுள்ளார், குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சியில் வரும் சிங்கிள் ஷாட் காட்சி ஆகசிறப்பு.

சி.லோகேஷ்வரன் இசையில் பாடல்கள் அற்புதம். மேலும், வாய்தா வாய்தா என்னும் பாடல் மனதில் நிற்கும் வண்ணமே உள்ளது.

கிராமத்தில் இருக்கும் சாதீயப் போக்கையும் நீதிமன்றங்களில் நிகழும் ஆணவப்போக்கையும் எவ்வித அலங்காரமுமின்றிப் பக்குவமான திரைக்கதையோடு படத்தை உருவாக்கியுள்ளார் இயக்குநர் மகிவர்மன்.சி.எஸ்.

வாய்தா – சாதியின் ஆணவத்தையும் அவலத்தையும் உணர்த்தும் படம்