ட்ராமா திரை விமர்சனம் 3.25/5

மிகுந்த செல்வாக்கோடு வாழ்ந்து வரும் விவேக் பிரசன்னாவிற்கு திருமணமாகி வருடங்கள் கடந்தும் ஒரு குழந்தை இல்லை. இவரது மனைவியான சாந்தினி தங்களுக்கு ஒரு குழந்தை இல்லையென அனுதினமும் மன வேதனைக்குள்ளாகிறார். இதனால், இவர்களுக்குள் எப்போதும் ஒரு வருத்தமான சூழலே இருந்து வருகிறது.

இந்நிலையில், தனியார் கருத்தரிப்பு மையம் ஒன்றின் விளம்பரத்தைக் கண்டு, அங்கு சிகிச்சை எடுக்கிறார் விவேக் பிரசன்னா.நாட்கள் கடந்து செல்ல, சாந்தினி கர்ப்பமாகிறார்.

இது ஒருபுறம் இருக்க, மற்றொரு பக்கம் ஆட்டோ ஓட்டுநர் மாரிமுத்துவின் மகளாக வரும் பூர்ணிமா ரவியை காதலிக்கிறார் ப்ரதோஷ். முதலில், ப்ரதோஷின் காதலை ஏற்க மறுத்தாலும், அதன்பின் அவர் மீது காதலில் விழுகிறார் பூர்ணிமா. இவர்கள் இருவரும் நெருங்கி காதலித்ததன் விளைவு, பூர்ணிமா கர்ப்பமாகிறார்.

இந்த இரண்டு பெண்களும் கர்ப்பமாகியிருக்கிறார்கள். இவர்களுக்குள் என்ன தொடர்பு.?? சாந்தினியின் கர்ப்பத்திற்கு பின்னால் நடந்தது என்ன.?? பூர்ணிமா ரவியின் வாழ்க்கையில் நடந்தது என்ன.?? என்பதே படத்தின் மீதிக் கதை.

இயக்குனர் தம்பிதுரை மாரியப்பன் இயக்கத்தில் விவேக் பிரசன்னா, சாந்தினி, சஞ்சீவ், ஆனந்த், பூர்ணிமா ரவி, ப்ரதோஷ், மாரிமுத்து, ரமா உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகி இன்று திரைக்கு வந்திருக்கும் திரைப்படம் தான் “ட்ராமா”.

அஜித் ஸ்ரீனிவாசன் படத்திற்கு ஒளிப்பதிவு செய்ய ஆர் எஸ் ராஜ்பிரதாப் இசையமைத்திருக்கிறார். TURM ப்ரொடக்‌ஷன் ஹவுஸ் சார்பில் எஸ் உமா மகேஸ்வரி படத்தினை தயாரித்திருக்கிறார்.