இரு சக்கர வாகனத்தில் பயணித்த அமைச்சர் ஜெயக்குமார்

அண்ணாசாலையில் கரை வேட்டியுடன் பைக்கில் வலம் வந்த அமைச்சர்!

எப்போதும் பரபரப்பாக காணப்படும் பகுதி சென்னை அண்ணாசாலை. இரவும் பகலும் ஓயாமல் வாகனங்கள் செல்லும் சாலை தான் இது. காலை 11 மணி இருக்கும் வெள்ளை வேட்டி, சட்டை அதுவும் அதிமுக கரை வேட்டியுடன் பைக்கில் ஒருவர் ஹெல்மெட் அணிந்துகொண்டு வேகமாய் வந்து ஸ்பென்சர் சிக்னலில் நிற்கிறார்.

அக்கம் பக்கத்தில் இருந்த வாகன ஓட்டிகள் இவர் யார் என்று சிறிய சந்தேகத்துடன் உற்று நோக்குகின்றனர். அவர்களைப் பார்த்து கையசைத்து சிரிக்கிறார் அவர். அப்போது தான் அவர்களுக்கு தெரிகிறது அவர் அமைச்சர் ஜெயக்குமார் என்பது. காரில் இருந்த சிலர் பைக்கில் இருந்த சிலர் இறங்கி அவரை சூழ்ந்துகொண்டு செல்பி எடுத்துக் கொள்கின்றனர்.

“என்ன சார் எங்கே போறீங்க? கார்ல ஏன் வரல? பைக்கில் வந்து இருக்கீங்களே” என்று கேட்கிறார்கள். அதற்கு அமைச்சர் ஜெயக்குமார் சிரித்துக் கொண்டே, ஹெல்மெட் என்பது மிக மிக அவசியம் இன்றைக்கு முகக்கவசம் எவ்வளவு முக்கியமானதாக இருக்கிறதோ அதே போல தலைக்கவசம் எப்போதும் ரொம்ப முக்கியமானது அதை பலபேர் மறந்துட்டாங்க, இதனால் ஏற்பட்ட உயிரிழப்பு ரொம்ப அதிகமா இருக்கு.

இன்னைக்கு தனியார் ஹெல்மெட் கடை திறப்பு விழா நிகழ்ச்சியில் கலந்துகிட்டேன். எனவே, இளைஞர்களுக்கு ஒரு விழிப்புணர்வை கொடுப்பதற்காகத்தான் நான் ஹெல்மெட் போட்டு பைக்கில் சில கிலோமீட்டர் வலம் வருகிறேன் என்றார். இன்று ஒரு நாள் மட்டுமல்ல நேரம் கிடைக்கும் போதெல்லாம் இதேபோல ஹெல்மெட் அணிந்துகொண்டு மக்கள் மத்தியில் விழிப்புணர்வை உருவாக்க முடிவெடுத்திருக்கிறேன்” என்றார். அவரது பதிலை கேட்டு அங்கு இருந்தவர்கள் அமைச்சருக்கு மகிழ்ச்சியுடன் வாழ்த்து தெரிவித்தனர்.

எப்போதுமே மக்களோடு மக்களாக பயணிக்கக்கூடிய அமைச்சர்களில் முதன்மையானவராக திகழ்பவர் ஜெயக்குமார். இந்த விஷயத்திலும் மக்கள் நலனில் அக்கறை கொண்டு ஹெல்மெட் அணிந்து பைக்கில் வலம் வருகிறார் அவரது வெற்றிப்பயணம் தொடரட்டும்.

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *