நடிகர்கள் உதயா – அஜ்மல் – யோகி பாபு முதன்மையான வேடங்களில் நடித்திருக்கும் ‘அக்யூஸ்ட்’ திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.
பிரபு ஸ்ரீநிவாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘அக்யூஸ்ட்’ திரைப்படத்தில் உதயா, அஜ்மல், யோகி பாபு, ஜான்விகா, பிரபாகர், டானி, சுபத்ரா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஐ. மருதநாயகம் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தத் திரைப்படத்திற்கு நரேன் பாலகுமார் இசையமைத்திருக்கிறார். ஆக்ஷன்-ஃபேமிலி என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஜேசன் ஸ்டுடியோஸ் – சச்சின் சினிமாஸ்- ஸ்ரீ தயாகரன் சினி புரொடக்ஷன் மற்றும் மை ஸ்டூடியோஸ் ஆகிய நிறுவனங்கள் சார்பில் உதயா – ‘தயா’ என். பன்னீர்செல்வம் – எம். தங்கவேல் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.
ஆகஸ்ட் முதல் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் ‘அக்யூஸ்ட்’ திரைப்படத்தினை விளம்பரப்படுத்தும் பணிகளில் படக் குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ள நிலையில் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பன்னீர்செல்வம் பேசுகையில், ”இப்படத்தின் பணிகளை இந்த ஆண்டு ஜனவரி மாதம் இரண்டாம் தேதியன்று தொடங்கி, ஆகஸ்ட் ஒன்றாம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியிடுகிறோம். ஒரு படத்தை இவ்வளவு விரைவாக நிறைவு செய்து திரையரங்குகளில் வெளியிடுவதற்காக முழு ஒத்துழைப்பினை வழங்கிய நடிகர் உதயாவிற்கு என் முதல் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இப்படத்தின் கதையை இயக்குநர் பிரபு ஸ்ரீநிவாஸ், உதயா மூலமாக எங்களை சந்தித்து சொன்னார். அவர் சொன்ன கதை பிடித்துப் போனதால், அடுத்த நாளே படத்தின் பணிகளை பூஜையுடன் தொடங்கினோம். உதயாவை தொடர்ந்து கதையில் முக்கியமான வேடத்தில் நடிக்க நடிகர் அஜ்மல் மற்றும் யோகி பாபு ஒப்பந்தமானார்கள். இவர்களைத் தொடர்ந்து நாயகி ஜான்விகா, பவன், பிரபாகர், பெங்களூரூ டானி, சுபத்ரா என அந்தந்த கதாபாத்திரத்திற்கு பொருத்தமானவர்களை இயக்குநரும் உதயாவும் தேர்வு செய்தனர்.
குறிப்பாக யோகி பாபு தலைவர் ரஜினி படத்தில் நடித்துக்கொண்டிருந்த போது உதயாவிற்காக பதினான்கு நாட்களை ஒதுக்கி முழு ஒத்துழைப்பை வழங்கினார்.
தயாரிப்பாளர் சேது பேசுகையில், ”நாங்கள் பெரிதாக எதிர்பார்த்து முதல் முதலாக தயாரிப்பில் ஈடுபட்டிருக்கும் படம் இது. இதற்கு உதயா தான் காரணம். அவருடன் நடைபெற்ற ஒரு சாதாரண சந்திப்பு தான் இப்படத்தில் எங்களை இணைய வைத்தது. இயக்குநர் பிரபு ஸ்ரீனிவாஸ் எங்களிடம் என்ன கதையை சொன்னாரோ, அதை அப்படியே எடுத்திருக்கிறார். இந்தப் படத்திற்கு எல்லாம் பாசிட்டிவ் ஆகவே அமைந்தது. இந்தப் படத்தின் கதை தனக்கு என்ன தேவையோ,பாஅதை அதுவே இழுத்துக் கொண்டது . நாங்கள் எதையும் செய்யவில்லை. அதை என்ன கேட்டதோ அதை நாங்கள் செய்து கொடுத்தோம். படம் சிறப்பாக வந்திருக்கிறது. படத்தில் பணியாற்றிய நடிகர்களுக்கும் , நடிகைகளுக்கும், தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்,” என்றார்.
இசையமைப்பாளர் நரேன் பாலகுமார் பேசுகையில், ”அக்யூஸ்ட் படத்தில் பணியாற்றியது எனக்கு நல்லதொரு அனுபவம். ஜனவரியில் தான் இப்படத்திற்கான பாடல்களை உருவாக்கினோம். ஆறு மாதத்திற்குள் ஃபர்ஸ்ட் காப்பி ரெடி ஆகிவிட்டது. நான் இந்த குழுவில் இணைந்ததற்கு முக்கியமான காரணம் உதயா தான். அவருக்கு என்னுடைய முதல் நன்றி.
இந்தப் படத்தில் மூன்று பாடல்கள் இடம்பெற்று இருக்கின்றன. இந்தப் படத்தின் திரைக்கதையை மேம்படுத்தும் வகையில் பின்னணி இசை அமைத்திருக்கிறேன் என நம்புகிறேன். நீங்கள் அனைவரும் ஆகஸ்ட் முதல் தேதியன்று இப்படத்தை திரையரங்குகளில் பார்த்து உங்களது விமர்சனத்தை முன்வைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்,” என்றார்.
நாயகி ஜான்விகா பேசுகையில், ”இது என்னுடைய முதல் தமிழ் திரைப்படம். ‘அக்யூஸ்ட்’ ஆகஸ்ட் 1ம் தேதி வெளியாகிறது. உங்கள் அனைவரின் ஆதரவும் அன்பும் தேவை.
இந்த படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பை அளித்த தயாரிப்பாளருக்கும் , இயக்குநருக்கும், உதயாவிற்கும் நன்றி.
இந்தப் படத்தில் அழகான காதல் கதை இருக்கிறது. அற்புதமான பாடல்கள் உள்ளன. சில்வா மாஸ்டர் அமைத்த சண்டை காட்சிகளும் உள்ளன. யோகி பாபுவின் காமெடி இருக்கிறது. அத்துடன் இந்தத் திரைப்படம் ஒரு ஃபேமிலி என்டர்டெய்னர். அதனால் அனைவரும் இந்தப் படத்தை திரையரங்கத்திற்கு சென்று பார்த்து ரசித்து ஆதரவு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்,” என்றார்.
நடிகர் அஜ்மல் பேசுகையில், ”ஒருவர் வெற்றி பெற வேண்டும் என்று துணிந்து செயலில் ஈடுபட்டால், அவருக்கு இந்த உலகமே துணை நிற்கும் என்பார்கள். இதற்கு மிகப்பெரிய உதாரணம் உதயா. அவர் இந்த படத்திற்காக எவ்வளவு கடினமாக உழைத்தார் என்பதை படத்தின் பணிகள் தொடங்கிய முதல் நாளிலிருந்து எனக்குத் தெரியும்.
இந்தப் படத்தில் பணியாற்றிய நடிகர்களும் நடிகைகளும் தொழில்நுட்ப கலைஞர்களும் அனைவரும் ஒரே குடும்பமாக இணைந்து பணியாற்றினார்கள். இந்தப் படத்திற்கு கடவுளின் மிகப்பெரிய ஆசீர்வாதம் இருக்கிறது. அந்த ஆசி இன்று வரை தொடர்கிறது.
இயக்குநர் பிரபு ஸ்ரீநிவாஸ் என் கதாபாத்திரத்தை மட்டுமல்ல மலர் என்ற ஹீரோயின் கதாபாத்திரத்தையும் உதயாவின் கதாபாத்திரத்தையும் நன்றாக செதுக்கியிருந்தார். படத்தில் திறமையான தொழில்நுட்ப கலைஞர்களும் பணியாற்றியிருக்கிறார்கள்.
‘அஞ்சாதே’ படத்தில் பணியாற்றிய போது எனக்கு ஒரு பாசிட்டிவ் எனர்ஜி கிடைத்தது. ‘கோ’ படத்தில் பணியாற்றிய போதும் பாசிட்டிவ் எனர்ஜி கிடைத்தது அதேபோன்று பாசிட்டிவ் எனர்ஜி இந்தப் படத்தில் பணியாற்றிய போதும் எனக்கு கிடைத்தது. அதனால் இந்தப் படம் மிகப்பெரிய வெற்றி படமாக அமையும் என்ற நம்பிக்கை இருக்கிறது. இந்தப் படத்திற்கு ஊடகங்களில் பேராதரவு தேவை. அதை வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்,” என்றார்.