பைரி திரை விமர்சனம் 4.5/5

அறிமுக இயக்குனர் ஜான் கிளாடி இயக்கத்தில் சையத் மஜித், மேக்னா எலன், விஜி சேகர், ஜான் கிளாடி, சரண்யா ரவிச்சந்திரன், ரமேஷ் ஆறுமுகம், வினு லாரன்ஸ், ஆனந்த் குமார், ராஜன் உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் தான் “பைரி”..

ஏ வி வசந்த குமார் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு அருண் ராஜ் இசையமைக்க ஆர் எஸ் சதீஷ் குமார் படத்தொகுப்பு செய்திருக்கிறார்.

துரை ராஜ் தயாரித்திருக்கிறார்.

கன்னியாகுமரி அருகேயுள்ள நாகர்கோவில் பகுதியை சுற்றி படத்தின் கதைகளம் அமைக்கப்பட்டிருக்கிறது. பேச்சு வழக்கு மொழி, உடல் மொழி என அனைத்தும் அங்குள்ள வட்டாரத்திற்கு ஏற்ப படமாக்கப்பட்டுள்ளது.

படத்தின் தொடக்கத்திலேயே கதைக்குள் நகர்ந்து விடுகிறது. அதில் வில்லுப்பாட்டு ஒன்று பாடப்படுகிறது. அந்த பாடலுக்குள்ளே படத்தின் கதையும் நகர படம் ஆரம்பமாகிறது.

மதுரைக்கு ஜல்லிக்கட்டு, விருதுநகருக்கு ரேக்ளா ரேஸ் என்பது போல் நாகர்கோவிலுக்கு ஒரு புறா ரேஸ் என்று வீர விளையாட்டாக அதை பார்க்கின்றனர்.

புறா வளர்ப்பை தங்களது உயிரென கருதுகின்றனர். ராஜலிங்கம் என்ற கதாபாத்திரத்தில் தோன்றும் நாயகன் சையத் மற்றும் அவரது நண்பர்களும் புறா வளர்ப்பதை தங்களது வாழ்வாக எண்ணுகின்றனர்.

நாயகனின் அம்மாவாக விஜி சேகர் நடித்திருக்கிறார். ஒரே மகன் என்பதால், அவர் மீது அளவுகடந்த பாசம் வைத்திருக்கிறார். இந்த புறா ரேஸால் முன்னோர்கள் வாழ்க்கையை சீரழித்துவிட்டதாகவும், தனது மகனை நன்கு படிக்க வைத்து நல்லதொரு வேலைக்கு அனுப்பி வைக்க ஆசைப்படுகிறார் விஜி சேகர்.

அதற்காக, பொறியியல் கல்லூரியில் ராஜலிங்கத்தை சேர்த்து விடுகிறார். ஆனால், அரியர் வைக்கவே, அந்த பேப்பரை எழுதி முடிக்கும் வரை வீட்டில் புறா வளர்த்துக் கொள்ள அனுமதியை வாங்கிக் கொள்கிறார் ராஜ லிங்கம். புறா வளர்ப்பில் ஆர்வம் அதிகமாகவே, அவ்வப்போது பக்கத்து வீட்டு வாலிபர்களுடன் மோதலையும் வளர்த்துக் கொள்கிறார் ராஜ லிங்கம். தனது பகுதி இளைஞர்களை நல்வழிப்படுத்த வேண்டும் என்ற நோக்கில், தொடர்ந்து ஊக்கப்படுத்திக் கொண்டே இருக்கிறார் பண்ணையாராக வரும் ரமேஷ் ஆறுமுகம்.

ஊரில் புறா ரேஸுக்கான நாள் நெருங்குகிறது. அம்மாவின் எதிர்ப்பையும் மீறி புறா ரேஸில் கலந்து கொள்கிறார் ராஜலிங்கம். அதேசமயம், ஊரில் சில பல கொலைகளை செய்து பெரிய ரெளடியாக திரிபவர் வில்லனான சுயம்பு. இவரும் புறா ரேஸில் கலந்து கொள்கிறார். புறா ரேஸில் ராஜலிங்கத்திற்கும் சுயம்புவிற்கும் நேரடியாகவே மோதல் ஏற்படுகிறது.

அதன்பிறகு என்ன நடந்தது என்பதே படத்தின் மீதிக் கதை.

ராஜலிங்கம் கதாபாத்திரத்துக்கு சரியாகப் புரிந்து இருந்தார் நடிகர் சையத் மஜித்.

ஆரம்பத்தில் இருந்த வேகம் படம் இறுதி வரை கொண்டு வந்து படம் பார்ப்பவர்களை பரபரப்பாகவே வைத்திருந்தார். ஆனால், அனைத்து காட்சிகளையும் கோபத்தை வெளிப்படுத்தியதால் சற்று சலிப்படையை செய்கிறது.

விஜி சேகர் தன் மகனுக்காக போராடும் அம்மாவாக அளவோடு நடித்து படத்திற்கு மற்றொரு தூணாக வந்து நிற்கிறார். ரமேஷ் ஆறுமுகம், கேரக்டரை நச்சென செய்து முடித்திருக்கிறார். அவருடைய பண்ணையார் கதாபாத்திரத்தை செதுக்கியிருக்கிறார் இயக்குனர்.

நாயகி மேக்னா எலன், தனக்கு கொடுக்கப்பட்டதை கச்சிதமாக செய்திருக்கிறார். ராஜலிங்கத்திற்கு மாமன் மகளாக வரும் சரண்யா, அப்பகுதி பெண்ணாகவே மாறி, உடல் மொழி, பேச்சு மொழி என இரண்டையும் அழகாக செய்து திரைக்கு விருந்து படைத்திருக்கிறார்.

வில்லன் கதாபாத்திரத்தில் தோன்றிய வினு லாரன்ஸூம் தனது கேரக்டரை பூர்த்தியாக செய்திருக்கிறார். நண்பனாக நடித்து அனைவரையும் அசர வைத்து விட்டார் இயக்குனர் ஜான் கிளாடி.

படத்தின் பின்னணி இசையில் ஆரம்பத்தில் இருந்து அதே இசையை க்ளைமாக்ஸ் வரையிலும் கொண்டு சென்றது சற்று இரைச்சலாக உள்ளது. அதில் சற்று கவனம் செலுத்தியிருக்கலாம். வில்லுப்பாட்டு, சாமி பாட்டு இரண்டும் ரசிக்கும்படியாக இருந்தது.

தமிழ் சினிமாவிற்கு தரமான ஒரு இயக்குனர் கிடைத்திருக்கிறார் என்பதில் பெருமை கொள்ளலாம். காட்சியமைப்பு, கதைக்களம், வசனங்கள், நடிப்பு என அனைத்திலும் முத்திரை பதித்திருக்கிறார் இயக்குனர்.

ஒளிப்பதிவின் மெனக்கெடல் ஒவ்வொரு காட்சியிலும் காண முடிந்தது. புறா பறக்கும் போது எடுக்கப்பட்ட காட்சிகளாக இருக்கட்டும், ஆக்‌ஷன் காட்சிகளிலும், கதையின் வேகத்தையும் நன்கு உணர்ந்து அதை தெளிவாக காட்சிப்படுத்தியிருக்கிறார் ஒளிப்பதிவாளர். அமல் அப்பாவாக நடித்திருந்த ராஜனும் பாராட்டும்படியான நடிப்பைக் கொடுத்திருந்தார்.

ஒரு படம், அதில் நடித்த ஒட்டுமொத்த கலைஞர்களுக்கும் ஒரு அடையாளமாய் மாறும்படியான ஒரு படைப்பாக வந்திருக்கிறது இந்த “பைரி”.

பைரி – இந்திய சினிமா டைரியில் தனக்கென இடம் பிடிக்கும் என்பதில் ஐயமில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *