35-40 நிமிட சி.ஜி காட்சிகள் “வீரன்” படத்தில் உண்டு – இயக்குனர் சரவணன்;

நடிகர் ஆதி பேசியதாவது,

நான் இரண்டு வருடங்கள் தனிப்பட்ட காரணங்களால் படம் எதுவும் நடிக்கவில்லை. ‘வீரன்’ திரைப்படம் குடும்பங்களுக்கான ஒரு படமாக இருக்கும்.

இதற்கு முன்பு என்னுடைய படங்கள் அப்படித்தான் என்றாலும், இதில் குழந்தைகளுக்கான விஷயங்கள் நிறைய இருக்கிறது. ஜூன் மாதம் பள்ளி திறக்கப் போகிறது என்றால் அதற்கு முன்பு, ஜூன் இரண்டாம் தேதி ‘வீரன்’ படத்தை குழந்தைகளுக்கு காட்டினால் நிறைவாக இருக்கும் என்ற அளவுக்கு இந்த படம் மீது நம்பிக்கை உள்ளது.

நான் ஒரு 90’s கிட் என்பதால் எனக்கு சக்திமான் மிகவும் பிடிக்கும். அதுபோல, ‘வீரன்’ ஒரு தமிழ் சூப்பர் ஹீரோவாக நீண்ட காலத்திற்கு குழந்தைகளுக்கு பிடித்ததாக இருக்கும். இதனை வடிவமைத்த இயக்குநர் சரவணனுக்கு நன்றி. உடல் ரீதியாக மிகவும் சவாலாக இந்த படம் இருந்தது.

அந்த அளவுக்கு ஆக்சன் காட்சிகள் எனக்கு இருந்தது. இதற்கு முன்பு நான் அது போன்ற ஆக்‌ஷன் செய்ததில்லை. ‘அன்பறிவு’ சமயத்திலேயே இதற்கான ப்ரீ-புரொடக்‌ஷன் பணிகளை தொடங்கி விட்டோம். சத்யஜோதி நிறுவனத்துடன் இது எனக்கு மூன்றாவது படம்.

என் மேல் நம்பிக்கை வைத்து இவ்வளவு தூரம் கூட்டி வந்த அவர்களுக்கு நன்றி! நான் இதுவரை நடித்த ஐந்து படங்களிலேயே இதுதான் பெரிய படம். படத்தில் வினய் சார் சயின்டிஸ்ட் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவர் வந்ததும் படம் இன்னும் பெரிய அளவில் மாறியது. முனீஷ்காந்த், காளி வெங்கட் இருவரும் படத்திற்கு பெரிய பிளஸ்.

இந்த படம் ஹிட்டானது என்றால் அதன் கிரெடிட் பாதிக்கும் மேல் இவர்களுக்கும் நாங்கள் தர வேண்டும். சிங்கிள் பசங்க, கேரளா சாங் என என்னுடைய இரண்டாவது படத்தில் இருந்து ட்ரெண்டான அனைத்து பாடல்களுக்கும் சந்தோஷ் மாஸ்டர் தான் காரணம் அவருக்கும் நன்றி.

சசி, ஆதிரா, காளி வெங்கட் முனீஷ்காந்த் என படத்தில் நடித்த அனைவருக்கும் நன்றி. நக்கலைட்ஸ், டெம்பிள் மங்கிஸ் என யூடியூபில் திறமையுள்ளவர்களை இந்த படத்தில் நடிக்க வைத்துள்ளோம். ‘வீரன்’ நம் மண் சார்ந்த கதை என்பதால் இசையில் நிறைய விஷயங்கள் பரிசோதனை முயற்சியாக செய்திருக்கிறோம்.

மியூசிக்கலாக இந்த படம் பெரிதும் பேசப்படும். அதற்கு முக்கிய காரணம் என் நண்பன் ஜீவா. பொள்ளாச்சி பகுதியில் யாரும் இல்லாத ஒரு காட்டுக்குள் இதன் படப்பிடிப்பை கிட்டத்தட்ட ஐம்பது நாட்கள் நடத்தினோம். படத்தில் குதிரையுடன் சில காட்சிகள் இருக்கும்.

இயக்குநர் சரவணன் பேசியதாவது,

“கடந்த 2017 ஆம் ஆண்டு இறுதியில் இந்த கதை எழுதி முடித்து விட்டேன். அப்போதே ஆதியிடம் இந்த கதையை சொன்னேன். இந்த கதையில் உள்ள ஃபேன்டசி சூப்பர் ஹீரோ விஷயங்கள் போன்றவற்றின் மீது நம்பிக்கை வைத்து இந்த கதை அவருக்கு பிடித்திருந்தது.ஆதி இரண்டு படம் இயக்கிவிட்டார் அவரை எப்படி ஹீரோவாக ஹேண்டில் செய்வீர்கள் என்று நிறைய பேர் சொன்னார்கள். ஆனால் அது போன்று எந்த முரணும் எங்களுக்குள் நடக்கவில்லை. அந்தளவுக்கு எங்கள் இரண்டு பேருக்கும் புரிதல் இருந்தது.

35 – 40 நிமிடங்கள் படத்தில் சிஜி வரும். நாங்கள் கொடுக்கப்பட்டுள்ள பட்ஜெட்டுக்குள் செய்ய வேண்டும் என்று சொல்லி இருந்தோம். ஆனால் அதுவும் தாண்டி விட்டது. ஆனாலும் சிறப்பாக செய்திருக்கிறார்கள். இன்னும் நிறைய டிபார்ட்மெண்ட் இருக்கிறது. அடுத்தடுத்த நிகழ்வுகளில் அவர்களுடைய வேலை குறித்தும் நான் பகிர்ந்து கொள்கிறேன்.

‘மின்னல் முரளி’, ‘வீரன்’ இரண்டு படத்தின் கதையும் ஒன்றா என்ற விஷயம் பலரும் கேட்கிறார்கள். ‘மின்னல் முரளி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் 2018-ல் வெளியான போது நாங்கள் அந்த படத்தின் கதையையும், எங்கள் கதையையும் கிராஸ் செக் செய்துவிட்டோம். இரண்டும் வெவ்வேறு கதைகள். ‘வீரன்’ கதை ஆரம்பித்த 10 நிமிடங்களிலேயே இது முற்றிலும் வேறு என்பது உங்களுக்கு தெரியும்” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *