‘தியா’ புகழ் நடிகர் பிருத்வி அம்பர்- ‘ரதாவரா’ இயக்குநர் சந்திரசேகர் பாண்டியப்பா கூட்டணியில் ‘சௌகிதார்’ எனும் புதிய திரைப்படம் தயாராகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை ‘ரோரிங் ஸ்டார்’ ஸ்ரீ முரளி வெளியிட்டார்.

‘தியா’ புகழ் நடிகர் பிருத்வி அம்பர் மற்றும் ‘ரதாவரா’ படத்தின் இயக்குநர் சந்திரசேகர் பாண்டியப்பா ஆகிய இருவரும் இணையும் புதிய திரைப்படத்திற்கு ‘சௌகிதார்’ என பெயரிடப்பட்டுள்ளது. இதில் பிருத்வி அம்பர் ‘சௌகிதார்’ வேடத்தில் நடிக்கிறார். ‘சௌகிதார்’ எனும் படத்தின் தலைப்பை சிவப்பு வண்ண எழுத்துகளில் படக்குழுவினர் வெளியிட்டனர். ‘ரோரிங் ஸ்டார்’ ஸ்ரீ முரளி – இயக்குநர் சந்திரசேகர் பாண்டியப்பாவின் ஆறாவது படைப்பான ‘சௌகிதார்’ படத்தின் தலைப்பை வெளியிட்டு, படக் குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தார். ‘சௌகிதார்’ – ஒரு பன்மொழி திரைப்படம். கன்னடத்தில் y மட்டுமல்லாமல் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய மொழிகளிலும் இந்த திரைப்படம் தயாராகிறது.

‘சௌகிதார்’ எனும் தலைப்பை வைத்து இந்த திரைப்படம் மாஸான படம் என நினைத்து விடாதீர்கள். உண்மையில் இது ஒரு குடும்ப பொழுதுபோக்கு திரைப்படம். இயக்குநர் சந்திரசேகர் பாண்டியப்பா தன்னுடைய ஒவ்வொரு படத்திலும் புதிய கதையுடன் களம் காண்கிறார். ‘அனே பாடகி ‘ படத்தில் நகைச்சுவை, ‘ரதாவரா’ படத்தில் வழிப்பாட்டு கருப்பொருள், ‘தாரகாசுர’ திரைப்படத்தில் தனித்துவமான கதை களம், ‘ரெட் காலர்’ எனும் திரைப்படத்தில் க்ரைம் திரில்லர், ‘கௌஸ்தி’ திரைப்படத்தில் கடலோர பின்னணி.. என வித்தியாசமாக வடிவமைத்து ரசிகர்களிடம் பிரபலமானவர்.

பிருத்வி அம்பர் மற்றும் சந்திரசேகர் பாண்டியப்பா கூட்டணியில் தயாராகும் இந்த திரைப்படத்தை வித்யா சேகர் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் கல்லஹள்ளி சந்திரசேகர் தயாரிக்கிறார்.‌ இந்த திரைப்படத்திற்கு சச்சின் பஸ்ரூர் இசையமைக்க, பாடலாசிரியர்கள் வி. நாகேந்திர பிரசாத் மற்றும் பிரமோத் மறவந்தே ஆகியோர் பாடல்களை எழுதுகிறார்கள்.‌ படத்தில் இடம்பெறும் ஏனைய தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் நடிகர், நடிகைகள் பற்றிய விவரங்களை விரைவில் படக் குழுவினரால் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும்.

‘அனே பாடகி’ படத்தின் மூலம் சாண்டல்வுட்டில் அறிமுகமான இயக்குநர் சந்திரசேகர் பாண்டியப்பா ‘ரதாவரா’ படத்தின் மூலம் புகழ்பெற்றார். இந்த வெற்றிகளை தொடர்ந்து அவர் பாலிவுட்டிலும் அறிமுகமானார். கிஷோர் நடித்த ‘ரெட் காலர்’ எனும் அதிரடி திரைப்படத்தையும் இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தை நிறைவு செய்ததும் குருதத் கனிகா இயக்கிய ‘கரவாளி’ எனும் திரைப்படத்திற்கும் சந்திரசேகர் பாண்டியப்பா கதை எழுதியிருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *