‘தி டோர்’ திரை விமர்சனம் 3/5

கட்டிட கலைஞரான பாவனா வேலையின் காரணமாக அப்பாவின் ஃபோன் காலை எடுக்க மறுக்கிறார். அப்பா வீட்டிற்கு வரும் வழியில் ஐஸ் துகள்கள் அவர் முகத்தில் விழுகிறது. ஒரு பெண் உருவம் தெரிகிறது.

குழப்பத்தில் இருக்கும் போதே இரு சக்கர வாகனத்தில் இருந்து விழுந்து இறந்து விடுகிறார். சில நாட்கள் கழித்து பாவனாவிற்கு அந்த உருவம் தெரிகிறது. அவர் தனது தோழிகளிடம் சொல்கிறார். ஒரு தோழி இது பேயாக இருக்கலாம். அதைப் பற்றி ஆராய்ச்சி செய்பவரை அணுகலாம் என்று கூறுகிறார். கடவுளை நம்பாத பாவனா பேயையும் நம்ப மறுக்கிறார்.

பாவனா பல வருடங்களுக்குப் பிறகு இந்த படம் மூலம் தமிழில் ரீ எண்ட்ரி கொடுத்திருக்கிறார். ஆனால், இடைவெளி விட்டு வந்தது போல் தோன்றவில்லை. இன்னும் புத்தம் புதிதாகவே ஜொலிக்கிறார். கடவுள் நம்பிக்கை இல்லை என்ற தனது கதாபாத்திரத்தில் வலிமையான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். அவர் தோன்றும் காட்சிகள் புத்துணர்வு தருகிறது.

கணேஷ் வெங்கட்ராமன், வினோலியா, கபில், ஸ்ரீ ரஞ்சனி, சங்கீதா அனைவரும் தங்கள் பாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார்கள்.

பாவனாவின் பாத்திரத்தை சீராக கொண்டு போய் இருக்கிறார் இயக்குனர் ஜெய்தேவ். ஆனால், முதல் பாதி சிறிது நீள்வது போல் இருக்கிறது. இரண்டாம் பாதியில் அடுத்தடுத்து காட்சிகள் நகர்ந்தாலும் திரில்லில் சுவாரஸ்யம் சற்று குறைகிறது. வருண் உன்னியின் இசை பரவாயில்லை. கெளதம். ஜி. சிறப்பாக ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.

தி டோர் – மெதுவாக திறக்கிறது

– ஹேமலதா வாசுதேவன்