ரைட் – திரை விமர்சனம் 4/5

பிரதமர் வருவதால் பாதுகாப்பு பணிக்காக சென்று விடுகிறார் இன்ஸ்பெக்டர் நட்டி. தனது மகனை காணவில்லை என்று போலீஸ் நிலையத்திற்கு புகார் அளிக்க வருகிறார் அருண் பாண்டியன். ஆனால், அங்கிருக்கும் போலீஸ் எழுத்தர் மூணாறு ரமேஷ், அருண் பாண்டியனை கீழ்த்தரமாக நடத்தி, புகாரை தூக்கி வீசுகிறார்.

இந்நிலையில், போலீஸ் நிலையத்தில் இருந்து யாராவது வெளியே சென்றால் வெடிகுண்டு தானாக வெடிக்கும் என்று மர்மமான போன் ஒன்று வருகிறது. இதனைக் கேட்டதும் போலீஸ் நிலையத்திற்குள் சிக்கிக் கொண்ட அனைவரும் அதிர்ச்சியாகின்றனர். அந்த நிமிடத்திலிருந்து போலீஸ் நிலையத்தை மொத்தமாக தன் கண்ட்ரோலில் எடுத்துக் கொள்கிறார் அந்த மர்ம நபர். இங்கிருந்து எப்படியாவது தப்பிக்க வேண்டும் என்று அங்கிருப்பவர்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும் தோல்வியடைகிறது. இதனால், அடுத்த என்ன செய்வது என்று தெரியாமல் இருக்கிறார்கள்.

இறுதியில், காவல்நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த அந்த மர்ம நபர் யார்? அவர் ஏன் இதை செய்தார்? என்பதே படத்தின் மீதிக் கதை.

படத்தின் ஆரம்பத்தில் ஒருசில காட்சிகளில் தலை காட்டிவிட்டு, படத்தின் இரண்டாம் பாதியில் நட்டி, அடுத்தடுத்த காட்சிகளில் நடிப்பு ராட்சஷன் என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறார்.

படத்தில் நடித்திருந்த மூணாறு ரமேஷ், அக்ஷரா ரெட்டி, வினோதினி, ஆதித்யா, யுவினா உள்ளிட்ட அனைவருமே இயக்குனர் சொல்படி பணியாற்றி கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார்கள்.

அருண்பாண்டியன் இயல்பான, யதார்த்தமான நடிப்பிற்கு இன்னும் சற்று கவனம் செலுத்தியிருக்கலாம்.

போலீஸ் நிலையத்தை மையமாக கொண்டு ஏராளமான படங்கள் வந்திருந்தாலும், ரைட் படத்தின் கதை மாறுபட்ட கோணத்தில் சென்று மிகப் பெரிய பலம் சேர்த்திருக்கிறது என்றே கூறலாம். திரைக்கதையும் பரபரப்பாக சென்றதால் சீட்டின் நுனியில் உட்கார்ந்து பார்க்கும் அனுபவத்தை இப்படம் கொடுத்திருக்கிறது. மர்ம நபரின் போன் வந்ததிலிருந்து, இறுதிக் காட்சி வரையிலும் அடுத்து என்ன நடக்கும் என்ற திக் திக் நிமிடங்களாகவே கழிகிறது. இதுபோன்ற சஸ்பென்ஸ் படங்களைப் பார்க்கும் போது ஒரு சில காட்சிகளை முன்பே யூகிக்க முடியும். ஆனால், இப்படத்தில் யூகிக்க முடியாதவாறு திரைக்கதையை சாமர்த்தியமாக கையாண்டு திறமையான இயக்குனர் என்ற பெயரை பெறுகிறார் இயக்குனர் சுப்பிரமணியன் ரமேஷ் குமார்.

பாடல்களுக்கு முக்கியத்துவம்க கொடுக்கவில்லை என்றாலும், பின்னணி இசையில் இசையமைப்பாளரின் மெனக்கெடல் தெரிகிறது.

படம் முழுவதும் காவல் நிலைய காட்சிகள் தான் என்றாலும், ஒளிப்பதிவை சிறப்பாக கொடுத்து சபாஷ் போட வைக்கிறார் ஒளிப்பதிவாளர்.

இயக்கம்: சுப்ரமணியன் ரமேஷ் குமார்

நடிகர்கள்: நட்டி, அருண்பாண்டியன், மூணாறு ரமேஷ், அக்ஷரா ரெட்டி, வினோதினி, ஆதித்யா, யுவினா

தயாரிப்பாளர்: திருமால் லக்‌ஷ்மணன் & ஷியாமளா

இசை: குணா சுப்ரமணியன்

ஒளிப்பதிவு: எம் பத்மேஷ்

ரைட் – புது அனுபவம்