பைனாகுலரை வைத்து, விண்வெளி சார்ந்து அறிவியல் படிப்பைப் பயின்று நாயகன் அஜிதேஜ். நாயகி, ஸ்ரீஸ்வேதா ஜூனியர் வக்கீலாக பணிபுரிகிறார். எம் எல் ஏ சீட்டிற்காக எதையும் செய்யத் துணிகிறார் அஜிதேஸ்-ன் தந்தை நமோ நாராயணன். ஸ்ரீஸ்வேதாவின் தந்தை காதல் என்றாலே அதற்கு பெரும் எதிர் தெரிவிப்பவர்.
ஆனால், அஜிதேஸுக்கும் ஸ்ரீ ஸ்வேதாவிற்கும் காதல் மலர்கிறது. அமைச்சரின் மகளுக்கு தன் மகனைத் திருமணம் செய்து வைக்கும் கனவில் இருக்கும் நமோ நாராயணன் மற்றும் காதலுக்கு முழு எதிரியாக இருக்கும் ஸ்ரீஸ்வேதாவின் தந்தை இவர்களின் எதிர்ப்பை மீறி இருவரும் காதலிக்கிறார்கள்.
இந்நிலையில், பழங்காலத்து பைனாகுலர் ஒன்றை வாங்கும் அஜிதேஸின் கண்களில் ஒரு மாற்றம் நிகழ்கிறது. அவர், யாரையெல்லாம் கண்ணோடு கண் பார்க்கிறாரோ அவர்களின் இறக்கும் நாள் அவருக்கு தெரிந்து விடுகிறது.
ஒரு சந்தர்ப்பத்தில், ஸ்ரீஸ்வேதாவின் கண்களை நேருக்கு நேர் பார்க்க நேர்கிறது. அவர் இன்னும் 7 நாட்கள் மட்டுமே உயிரோடு இருக்கப் போவதாக அஜிதேஸுக்கு தெரிந்துவிடுகிறது. உடனே கதறி அழுகிறார் அஜிதேஸ்.
7 நாட்களில் மரணத்தை எதிர்நோக்கிக் காத்திருந்த ஸ்ரீ ஸ்வேதாவை அஜிதேஸ் காப்பாற்றினாரா இல்லையா என்பதே படத்தின் மீதிக் கதை.
நாயகன் அஜிதேஸுக்கு இது முதல் படம் மாதிரியே தெரியவில்லை. ஒரு அனுபவ நடிகரின் நடிப்பைக் கொடுத்து கண்கலங்க வைத்துவிட்டார் அஜிதேஸ். முதல் பாதியில் பயங்கர சுறுசுறுப்பான நடிப்பைக் கொடுத்துவிட்டு, இரண்டாம் பாதியில் அனைவரையும் கண்கலங்க வைத்திருக்கிறார்.
நாயகி ஸ்ரீஸ்வேதா முதல் பாதியில் அழகு தேவதையாகவும் இரண்டாம் பாதியில் நடிப்பு ராட்சசியாகவும் வந்து மிரட்டியிருக்கிறார். எந்த ஹீரோயினும் அவ்வளவு எளிதில் ஏற்றுக் கொள்ளாத ஒரு கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்து நடித்து அசத்தியிருக்கிறார். அதிலும் க்ளைமாக்ஸ் காட்சிகளில் கண்களை குளமாக்கிவிட்டார்.
மேலும், படத்தில் நடித்திருந்த பாக்யராஜ், நமோ நாராயணன், ஹீரோயின் அப்பாவாக நடித்தவர், ஹீரோ ஃப்ரண்ட் என படத்தில் நடித்திருந்த மற்ற கதாபாத்திரங்களும் படத்திற்கு பலமாக இருக்கிறார்கள்.
படத்தின் கதையை மிக அழகாக எழுதியிருக்கிறார் இயக்குனர். முதல் பாதி ஒரு கோணத்திலும், இரண்டாம் பாதி யாரும் யூகிக்காத வண்ணம் வேறொரு கோணத்திலும் பயணிக்க வைத்தது படத்திற்கு மிகபெரும் பலம். அதிலும், இரண்டாம் பாதியில் யாரும் யூகிக்காத வண்ணம் ரேபீஸ் தொற்றின் பாதிப்பினை கண்முன்னே கொண்டு வந்து வியப்பில் ஆழ்த்தியிருக்கிறார் இயக்குனர்.
ரேபீஸ் தொற்றினால், நோயாளிகள் என்ன மாதிரியான பாதிப்படைகின்றனர் என்பதை வெட்ட வெளிச்சமாக காட்டியிருக்கிறார். இது ஒரு விழிப்புணர்வு படமாகவே நாம் அனைவரும் நிச்சயம் பார்க்கலாம்.
ஒளிப்பதிவு படத்திற்கு மிகப்பெரும் பலம் சேர்த்திருக்கிறது. படத்தின் முதல் பாதியில் நிலாவை ரெபரன்ஸாக வைத்து, காட்சிகளை படமாக்கி அழகாக்கியிருக்கிறார் ஒளிப்பதிவாளர்.
பின்னணி இசை மற்றும் பாடல்கள் இரண்டுமே படத்திற்கு பெரிதும் கைகொடுத்திருக்கிறது.
க்ளைமாக்ஸ் சண்டைக் காட்சி மிகவும் இயல்பானமிரட்டலாக இருந்தது. படத்தொகுப்பாளர் கத்தியை கூர்மையாக பயன்படுத்தியிருக்கிறார்.
எம் சுந்தர் அவர்களின் எழுத்து மற்றும் இயக்கத்தில் அஜிதேஜ், ஸ்ரீஸ்வேதா, பாக்யராஜ், நமோ நாராயணன் உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் தான் அந்த 7 நாட்கள்.
படத்திற்கு ஒளிப்பதிவு செய்திருக்கிறார் கோபிநாத் துரை. மேலும், இசையமைத்திருக்கிறார் சச்சின் சுந்தர்.
படத்தின் தயாரித்திருக்கிறார் முரளி கபீர்தாஸ்.
அந்த 7 நாட்கள் – காதலிக்காக…