‘அம்… ஆ’ திரை விமர்சனம் 4/5

ஒரு அழகான மலை கிராமத்தில் தனது மூன்று வயது குழந்தை உடன் வசித்து வருகிறார் தேவதர்ஷினி. அவருக்கு உலகமே அவருடைய மகள் தான். ஆனால் அவரிடம் உள்ள ஒட்டுமொத்த பாசத்தையும் அந்த மகளுக்கு கொடுத்து வளர்த்து வருகிறார்.

யாருக்கும் பெரிதாக தெரியாமல் ரகசியமாக வாழ்ந்து வருகிறார் தேவதர்ஷினி. இதற்கிடையில் அந்த கிராமத்திற்கு சாலை அமைப்பதற்காக சர்வே எடுக்கும் பணிக்காக டிலேஷ் போத்தேன் வருகிறார்.

தேவதர்ஷணியையும் அவரது மகளையும் டிலேஷ் போத்தன் பின் தொடர்கிறார். அவர் எதற்காக பின் தொடர்கிறார்? தேவதர்ஷினி எதற்காக ரகசியமாக வாழ்ந்து வருகிறார்? என்பதை படத்தின் மீதி கதை.

இதுவரை காணாத தேவதர்ஷினியை இப்படத்தில் காணலாம். நகைச்சுவை பாத்திரம் என்றால் தேவதர்ஷினி அசால்டாக நடித்து விடுவார் என்று எல்லோருக்கும் தெரியும். ஆனால் இப்படத்தில் ஒரு குழந்தைக்கு தாயாக அழுத்தமாக நடித்து அனைவரையும் நெகிழ வைக்கிறார். குறிப்பாக இறுதி கட்ட காட்சிகளில் அனைவரின் கண்களிலும் கண்ணீரை வரவழைத்து விடுகிறார்.

ஜாபர் இடுக்கி எத்தனை வருட கால அனுபவம் இருக்கிறது என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறார். டீக்கடையில் அமர்ந்திருக்கும் பெரியவருக்கு பார்வை இல்லை என்றாலும் காட்சிக்கு ஒளி கொடுத்திருக்கிறார்.

குழந்தைக்கு ஏங்கும் தாயின் உணர்வையும் குழந்தையின் அருமை தெரியாத தாயின் உணர்வையும் யதார்த்தமாக இயக்கியிருக்கிறார் இயக்குனர் தாமஸ் கே செபாஸ்டியன்.

அழகிய மலை கிராமத்தை தனது ஒளிப்பதிவால் மாயாஜால வித்தை காட்டியிருக்கிறார் ஒளிப்பதிவாளர். கோபி சுந்தரின் பின்னணி இசை படத்திற்கு பலம் என்றால், அனிஷ்லாலின் ஒளிப்பதிவு முதுகெலும்பாக இருக்கிறது. காப்பி ப்ரொடக்ஷன் இப்படத்தை தயாரித்திருக்கிறது.

கடந்த ஜனவரி மாதம் மலையாளத்தில் வெளியாகி மக்களின் அமோக வரவேற்பை பெற்ற இப்படம் தமிழில் டப்பாகி வெளியாகியிருக்கிறது.

அம்…. ஆ – தாயின்றி ஒரு அணுவும் அசையாது